அமைச்சர் கமலி செய்த செயலை பற்றிதான் சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி கவனம் பெற்று வருகிறது.. தலைமைச் செயலகத்தின் அதிகாரப்பூர்வமான சூழலில், ஒரு அமைச்சரின் மனிதாபிமானமிக்க செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியென்ன செய்தார் கமலி?
அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் பலம் வாய்ந்த அரசியல் ஆளுமைகளை எதிர்கொண்டு வெற்றிவாகை சூடிய கமலி, தமிழக அமைச்சரவையில் கால்நடைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் திமுகவின் மருத்துவர் கோகிலா மணி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கமலி, பெரிய அரசியல் பின்புலம் ஏதுமின்றி அரசியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர்தான் இந்த கமலி
அமைச்சர் கமலி மனிதாபிமான செயல்: என்ன நடந்தது?
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் கமலி.. இவரது கணவர் பச்சமுத்து, இ-சேவை மையம் நடத்தி வருகிறார். பெரிய அரசியல் பின்புலம் இல்லாத எளிய குடும்பப் பின்னணியைக் கொண்ட கமலிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கல்வி மற்றும் எளிய குடும்பச் சூழலில் இருந்து வந்த இவர், தற்போது தமிழகத்தின் இளம் வயது அமைச்சராக அதாவது வெறும் 28 வயதிலேயே அமைச்சராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது.
தவெக கட்சியில் இடம் பெற்றுள்ள 4 பெண் அமைச்சர்களில் ஒருவரான கமலி, இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் மிக முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளார்.
அமைச்சர் கமலி மனிதாபிமான செயல் ஏன் பாராட்டைப் பெறுகிறது?
இந்நிலையில், தலைமைச் செயலகத்தின் அதிகாரப்பூர்வமான சூழலில், ஒரு அமைச்சரின் மனிதாபிமானமிக்க செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தலைமைச் செயலகத்தில் நேற்று வழக்கமான பணிகள் நிறைவடைந்து, மாலையில் ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த அமைதியான சூழலில், திடீரென தலைமைச் செயலக சட்டமன்றப் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடுமையான வலிப்பு ஏற்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
முதல் நாளே அசத்திய அமைச்சர் கமலி
இதைக் கண்ட சக ஊழியர்கள் பதற்றமடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், தனது துறை சார்ந்த பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்ட தவெக-வின் புதிய கால்நடைத் துறை அமைச்சர் எஸ்.கமலி, அந்தப் பகுதியில் நிலவிய அசாதாரணமான பரபரப்பையும், ஊழியர்களின் பதற்றத்தையும் கவனித்தார்.
சூழலின் தீவிரத்தை உணர்ந்த அமைச்சர் கமலி, சற்றும் தாமதிக்காமல் தனது காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, பாதுகாப்புப் பணியாளர்களைத் தாண்டி அந்த ஊழியர் விழுந்து கிடந்த இடத்திற்கு மின்னல் வேகத்தில் ஓடிச் சென்றார். அங்கிருந்தபடியே முதலுதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்திய அவர், அவசரகால மருத்துவ குழுவினரைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.
குவியும் பாராட்டுக்கள்
மேலும், அந்த ஊழியரைத் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி, தனது நேரடி முன்னிலையிலேயே அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்களிடம் அந்த ஊழியருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சராக பதவியேற்ற முதல் நாளே, எளிய ஊழியர் ஒருவரின் அவசர நிலைக்கு ஓடிவந்து உதவிய அமைச்சர் கமலியின் இந்த மனிதாபிமானச் செயலை தலைமைச் செயலகமே பாராட்டி வருகிறது. இணையத்திலும் இந்த செய்தி ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.

