பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி வந்துள்ள முதல்வர் விஜய்க்கு தயாராகும் மதிய விருந்தினை மாதம்பட்டி ரங்கராஜ் சமைப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்த மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது தவெகவுடன் நெருக்கம் காட்டி வருவது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்தின் நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலப் பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசு முறைப் பயணத்தில், அரசியல் தாண்டி தற்போது டெல்லி வட்டாரத்தில் ஒரு ருசிகரமான தகவல் வெளியாகி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரதமர் மோடியைச் சந்திக்க வந்துள்ள முதல்வர் விஜய் மற்றும் அவருடன் வந்துள்ள தமிழக அதிகாரிகளுக்குத் தயாராகும் மதிய விருந்தினை, பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் சமைப்பது தெரிய வந்துள்ளது.
முதல்வர் விஜய் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கான மதிய உணவைச் சமைப்பதற்காக, மாதம்பட்டி ரங்கராஜ் தனது பிரத்யேக சமையல் குழுவினருடன் டெல்லிக்கு முன்கூட்டியே வந்து முகாமிட்டுள்ளார். விஜய்க்கு முன்னதாக டெல்லியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழுவினருடன் வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி இருக்கிறது.
திமுக ஆட்சியின் போது, அறிவாலயத்தின் மிக முக்கிய குடும்ப விழாக்கள், அரசு சார்ந்த முக்கிய விருந்துகள், திமுக மாநாடுகள் மற்றும் திமுக மேலிடத்தின் பிரத்யேக சுபகாரியங்கள் என அனைத்திற்கும் மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் குழுவினரே சமையல் ஒப்பந்தத்தைப் பெற்று வந்தனர். இதன் மூலம் அவர் திமுக தரப்புடன் மிகவும் நெருக்கமாக அடையாளப்படுத்தப்பட்டார்.
தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தவெக உடனும் நெருக்கம் காட்டி வருகிறார். டெல்லி போன்ற ஒரு முக்கியமான அரசு முறைப் பயணத்தில், முதல்வருக்கான உணவுப் பொறுப்பு மாதம்பட்டி ரங்கராஜிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது. இது வெறும் சமையல் ஒப்பந்தம் மட்டுமே என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதிகார மையங்களுடன் தங்களை நெருக்கமாக வைத்துக் கொள்ளும் வணிக உத்தியின் ஒரு பகுதிதான் இது என சோசியல் மீடியாவில் விவாதம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஒருமுறை விஜய் சார்பாக ஷாருக் கானுக்கு விருந்து சமைக்கப்பட்ட போதும், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பே உணவை தயார் செய்தது குறிப்பிடத்தக்கது.

