Homeஅரசியல்அமைச்சர் வன்னியரசு பேட்டி: அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது நாகரிகமற்ற அரசியல்!

அமைச்சர் வன்னியரசு பேட்டி: அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது நாகரிகமற்ற அரசியல்!

அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது என மைச்சர் வன்னியரசு கூறினார். தவெக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பும் காவல்துறையினர் தற்போது வரையில் தனிப்பட்ட முறையில் செயல்படுவதாகவும் வன்னியரசு ஆதங்கத்தை கூறினார். காவல்துறை என்றால் முறைத்து கொண்டுதான் இருக்க வேண்டுமா என்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வன்னியரசு கேள்வி எழுப்பினார்.

சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு எனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு வருகை தந்துள்ளேன். ‘ஐந்தினை மக்கள் கட்சி’யினுடைய பொதுச்செயலாளர் தேவதாஸ் நினைவேந்தல் நிகழ்வில் இன்றைக்கு எங்களுடைய தலைவர் திருமாவளவன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இன்றைக்கு நாடாளுமன்ற ஆய்வுத் குழு கூட்டம் இருப்பதன் காரணமாக, அவருக்குப் பதிலாக நான் இங்கு வந்திருக்கிறேன் என்றார்.

மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களின் வழியில் ஒரு மோசமான அரசியல் நடந்கிறது.. ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களை விலைக்கு வாங்கி, அவர்களைத் தன் பக்கம் இழுத்து எம்.எல்.ஏ ஆக்குகின்ற வேலைகள் நடந்து வருகின்றனவே என்று செய்தியாளர்கள் சிலர் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த வன்னியரசு, இந்த மாதிரியான அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இது நாகரிகமான அரசியலுக்கு ஏற்புடையது அல்ல. திருமாவளவன் இது குறித்து என்ன கருத்து சொன்னாரோ, அதுவேதான் எங்களுடைய கட்சியின் நிலைப்பாடு. நாகரிகமான அரசியலை நோக்கி நாம் முன்னகர வேண்டும்; இது போன்ற செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டது குறித்து இன்றைக்குத்தான் நான் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். கட்டாயம் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரைத் தலைமைச் செயலகத்திற்கு வரச் சொல்லி இருக்கிறோம். இது குறித்து விரிவாகப் பேசி, விரைவில் அவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கான அனைத்து முன்முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். அதேபோல், ஏற்கனவே படுகொலைக்குள்ளான ஆகாஷ் குடும்பத்திற்கு திருமாவளவன் நேரடியாகச் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்கள். அந்தக் குடும்பத்திற்கும் கட்டாயம் நாங்கள் நீதியைப் பெற்றுத் தருவோம்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல. புதிய அரசு பதவியேற்று இன்னும் 10 நாட்கள்கூட ஆகவில்லை. இப்பதான் புதிய காவல்துறை அதிகாரிகளை நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். மரியாதைக்குரிய அன்பு அவர்கள் ஏடிஜிபி-யாக இன்றைக்குத்தான் பதவியேற்கிறார். டிஜிபி இன்னும் முறைப்படி நியமிக்கப்படவில்லை; இனிமேல்தான் யார் யார் வருவார்கள் என்ற பட்டியல் தயாராகும். நிலைமை இப்படி இருக்க, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை முறைப்படுத்துவதற்கான கட்டமைப்பு இன்றைக்குத்தான் உருவாக்கப்பட்டு வருகிறது.

420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்
ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள், மற்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை நாங்கள் தொடர்ந்து சொல்லி வந்தோம். அதைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளை நாங்கள் இப்போது எடுத்து வருகிறோம். அப்படியிருக்க, அதற்குள்ளாகவே தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று கூறுவது அதீதமான, திட்டமிட்ட ஒரு குற்றச்சாட்டு என்றே நான் பார்க்கிறேன். கட்டாயம் இந்த அரசு ஒரு நல்ல நிர்வாகத்தோடு சட்டம்-ஒழுங்கைச் சீராக நடத்தும். ஏனென்றால், பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துத்தான் இந்த அரசைத் தேர்வு செய்திருக்கிறார்கள்; அதில் நாங்க ஒரு அங்கமாக இருக்கிறோம். எனவே, இதைச் சரிசெய்யும் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது.

சூலூர் பாலியல் வழக்கு விவகாரத்தைப் பேசிக் கொண்டிருக்கும்போது மூன்று காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் சிரித்து குறித்த கேள்விக்கு?

அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தப் பிரதானப் பொருளைப் பேசுவதற்கு முன்பாக, வேறொரு இயல்பான விஷயத்தைப் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட காட்சி அது என்று விளக்கியுள்ளனர். செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு அவர்கள் தங்களுக்குள் உரையாடியிருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் என்றால் எப்போதுமே முறைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அவர்கள் சிரிக்கவே கூடாதா? இதையெல்லாம் ஒரு பெரிய குற்றச்சாட்டாக மாற்றி, இன்றைக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் மிக அதிகமாக விவாதிப்பதுதான் அதீதமான குற்றச்சாட்டு என்று நான் கூறுகிறேன்.

விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாகச் சிவகாசி பகுதியில் தொடர்ந்து பட்டாசு விபத்துகள் ஏற்படுவதும், அதன் மூலம் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் ஏற்படுவதும் கவலைக்குரியது. இதைத் தடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அதே நேரத்தில், சட்டவிரோதக் கடைகள், சட்டவிரோதத் தொழிற்சாலைகள் என்ற பெயரில் சில அதிகாரிகள் மக்களை அச்சுறுத்துகின்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதை மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தொழிலில் இருக்கின்ற தலித் மக்கள் மற்றும் எளிய மக்கள் என்னிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதாவது, அதிகாரிகள் பெரும் முதலாளிகளையும், பெரிய தொழிற்சாலைகளையும் விட்டுவிட்டு, சிறிய அளவில் தொழில் செய்யும் எளியவர்களைக் குறிவைத்துச் செயல்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து நான் மாவட்ட ஆட்சியரிடம் கட்டாயம் பேசுவேன். பட்டாசு விபத்துகள் நடக்கக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை; ஆனால், எளிய தொழிலாளர்களை அச்சுறுத்துகின்ற அல்லது பிளாக்மெயில் செய்கின்ற வேலைகளில் அதிகாரிகள் ஈடுபடக் கூடாது, அதை நிறுத்த வேண்டும்.

மாவட்டத்தில் சுமார் 1,028 பட்டாசு ஆலைகள் இருக்கும்போது, அவற்றைக் கண்காணிக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தில் மிகக் குறைவான அதிகாரிகளே இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு? இதனால் ஆங்காங்கே அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகச் சிறு பட்டாசுத் தொழிலாளர்கள் தொடர்ந்து மனு அளிக்கிறார்கள். குறிப்பாக, தீபாவளி போன்ற வியாபாரம் நடக்கும் முக்கிய நேரங்களில் அவர்களுக்கு வீண் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. பட்டாசுத் தொழில் என்பது முறைப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாக மாற வேண்டும். விபத்துகள் இல்லாமல் தொழிற்சாலைகளை எப்படி நடத்துவது என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால், இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ஒரு தொழிலை நம்பித்தான் வாழ்கிறார்கள். இது ஒரு கந்தக பூமி; இந்தப் பகுதியில் வேறு என்ன தொழில் செய்ய முடியும்? 10 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இத்தொழிலை நாம் அழித்துவிட முடியாது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும், அவர்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டும். இது குறித்துச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் நான் பேசி, சிறு தொழிற்சாலைகளில் இருப்பவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல், சட்டப்பூர்வமாகத் தொழிலை முறைப்படுத்தி நடத்துவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

தொழில் துறை அமைச்சர் பட்டாசு தொழிலுக்கு என சிறப்பு குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதில் நீங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு? இது குறித்து அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்க செய்வேன்” இவ்வாறு வன்னியரசு கூறினார்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை